தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரின் சோதனையால் ஒரே இரவில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர்
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையானது நேற்று இரவு கல்முனை பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது.

வீதி ஒழுங்குமுறை
இத் திடீர் சோதனை நடவடிக்கையில் கல்முனை, சவளைக்கடை பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து கொண்டதுடன், சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்கள் உட்பட கனரக வாகனங்கள் கட்டங்கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.
அத்துடன் வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன. மேலும் இரவில் பயணம் மேற்கொள்ளும் கல்முனை கொழும்பு குளிருட்டப்பட்ட பேருந்துகளில் சோதனை முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.
இதே வேளை பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும் நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.