திருமண வைபவத்திற்கு சென்ற குடும்பம்...வனப்பகுதியில் மீட்கப்பட்ட 4 வயது குழந்தை!
நோர்வூட் டங்கள் வனப்பகுதியிலிருந்து 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்றையதினம் (18-06-2024) இடம்பெற்றுள்ளது.
லக்ஸபான பகுதியிலிருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமண வைபவம் ஒன்றுக்கு குறித்த ஆண் குழந்தையை அவருடைய பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர்.
குறித்த குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென குழந்தை மாயமானதைத் தொடர்ந்து நேற்றையதினம் (17) மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
முறைபாட்டுக்கு அமைய பொலிஸாரும் பொது மக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கமரா காட்சிகளின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குழந்தை காணாமல் போன சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.