மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நேற்று மாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நூதனசாலையை பார்வையிட வந்த குடும்பம்
கம்பஹாவிலிருந்து காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென குறுக்கீடு செய்து வீதியைக் கடக்க முயன்ற மோட்டார் வண்டியில் மோதுவதைத் தவிர்ப்பதற்கு முற்பட்டவேளை கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த கார் எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது மோதியுள்ளது.

காயங்களுக்குட்பட்டவர்கள்
இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உட்பட காரில் பயணித்தவர்களும் அடங்கலாக 4 பேர் பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளதாக தெரிவிளக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.
இதில் துவிச்சக்கர வண்டி காருக்குக் கீழ் அக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.