ஓரினச்சேர்க்கையை எதிர்த்து 3 மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
சமூக சீரழிவை ஏற்படுத்தும் குறுகிய பார்வை கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்கும் அரச இயந்திரத்தின் முயற்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஓரினச்சேர்க்கை
ஒரு நாட்டின் கலாச்சார அடையாளம், வரலாற்று பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய ஒழுக்கங்கள் புறக்கணிக்கப்பட்டு, குறுகிய தன்னிச்சையான மற்றும் குருட்டுத்தனமான போலித்தனத்தின் அடிப்படையில் அரசை நிர்வகிக்க முயற்சித்தால், அது நாட்டில் அராஜகத்திற்கும் முழு சமூகத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தால் உடல் ரீதியான தண்டனையை குற்றமாக்குவதற்கு முன்மொழியப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 82வது பிரிவில் திருத்தம் செய்வதும், ஓரினச்சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு ஆதரவளிப்பதும் இத்தகைய கடுமையான ஒழுக்க அராஜகத்திற்கும் பல சமூக நெருக்கடிகளுக்கும் காரணங்களாகும் என்று தேரர்கள் தங்கள் கடிதத்தில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.
பௌத்த தத்துவ விழுமியங்களின் தனித்துவம் மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடு நிலையான சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு வழிவகுக்கிறது என்பது குறித்து எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஜனாதிபதி, இந்த விடயத்தில் அவசர கவனம் செலுத்தி, இந்த ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மகாநாயக்க தேரர்கள் தங்கள் கடிதத்தில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.