குரங்குகளை தடுத்து வைக்க திட்டம் ; பல மில்லியன் ரூபா நிதி
குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது.
குரங்கு பாதுகாப்பு சரணாலயம்
நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது.
நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம் காரணமாக பொருளாதார நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்மொழியப்பட்ட குரங்கு தடுப்பு சரணாலயத்திற்கான பரிந்துரைகளை வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. மேலும் மாத்தளை மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுவின் அனுமதியும் இதற்குப் பெறப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.