மாணவனை தாக்கி பகிடிவதை; 20 மாணவர்கள் இடைநிறுத்தம்; அதிரடி நடவடிக்கை!
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மனோஜ் தெரிவித்துள்ளார்.
பகடிவதைக்கு எதிர்ப்பு
இடைநிறுத்தம் செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலை மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலை மாணவன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சீனிய மாணவர்கள் பகிடி செய்ததால் அவமானத்தில் தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.