2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் இன்றையதினம் (19-09-2023) தெரிவித்தார்.
கடந்த ஆண்டு (2022) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகி வெளியானதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி திட்டமிட்டுள்ள உயர் தரப்பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் நடத்த முடியும் என அவர் யோசனை முன்வைத்தார்.
அதன்பின்னர் பெப்ரவரி மாதம் 19ம் திகதி முதல் பாடசாலைகளின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.
குறித்த பரீட்சை பெறுபேறுகள் 3 மாத காலப்பகுதிக்குள் வெளியிடப்படுமானால், அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வழமையான வகையில் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், குறித்த யோசனை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன், அவர் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.