யாழ் - கண்டி வீதியில் பாரவூர்தியுடன் மற்றொரு பாரவூர்தி மோதி இருவர் பலி!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவினர் பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த உரம் ஏற்றிய மற்றொரு லொறி நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலின் போது உரம் ஏற்றிய லொறி மீனவர்கள் இருந்த லொறியின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய மீனவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் ஒரு மீனவர் பலத்த காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபரும் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இச்சம்பவம் குறித்து பூனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.