வீடொன்றில் அரங்கேறிய கொடூரம்; வெளிநாட்டில் மனைவி; பறிபோன இரு உயிர்கள்
காலி - தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மெலும் தெரியவருகையில்,

மூவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்
காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்த பாட்டியின் பேத்தியாவார். தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் உனவடுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே சந்தேகநபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
தெலிகட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷத சில்வாவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஜி. சரத்சந்திர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.