கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள்
கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.