யாழில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரம் ; பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (10) அதிகாலை 1.18 மணியளவில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டைதீவு பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் குறித்த இளைஞனை பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை – அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் ரக வாகனம் ஒன்று பயணித்துள்ளது.
அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்ட போது, பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனம் அதிவேகமாக தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, வாகனம் மீண்டும் பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து, பொலிஸார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் பயணித்த 17 வயது இளைஞன் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது குறித்த ஹயஸ் வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் ஏனைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.