இலங்கைக்கு நாளை வரவுள்ள 15 மில்லியன் முட்டைகள்!
பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்வதற்காக நாளை (டிசம்பர் 17) 15 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் தரமான முட்டைகளை சதொச விற்பனை நிலையங்களுக்கு திங்கட்கிழமை (டிச.18) விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளது.
நாளை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படும் முட்டைகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, 2024 ஏப்ரல் இறுதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நேற்றைய தினம் (15-12-2023) தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை நியாயமற்ற முறையில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலையைக் குறைக்கத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் என்றும் வர்த்தக அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.