இலங்கை நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் 11 லட்சம் வழக்குகள்!
இலங்கை நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக்கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைக்கால அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2025 ஜூன் 30ஆம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில், நாடளாவிய ரீதியிலுள்ள 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் நீதிமன்றங்கள் 818,869 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்கள் 260,007 வழக்குகள், உயர் நீதிமன்றம் - குற்றவியல் 27,376 வழக்குகள், மாகாண சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றங்கள் 6,591 வழக்குகள், வணிக உயர் நீதிமன்றம் 6,330 வழக்குகள், உயர் நீதிமன்றம் 5,396 வழக்குகள்,
மேன்முறையீட்டு நீதிமன்றம் 5,216 வழக்குகள், தொழில் தீர்ப்பாயங்கள் 3,131 வழக்குகள், சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் 1,556 வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் 65 வழக்குகள் ஆகும்.
நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் இந்த வழக்குத் தேக்கம், நீதியை நிலைநாட்டுவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.