கயிறு கழுத்தில் இறுகி 11 வயது சிறுவன் பரிதாப மரணம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பாரதி வீதியில் உள்ள வீட்டில் கட்டப்பட்ட கயிறு கழுத்தில் இறுகி 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பாரதி வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய மதிவாணன் ஜனுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டின் முன்பகுதியில் பொருட்களை நிறுப்பதற்கான தராசுக்காக நையிலோன் கயிறு கட்டப்பட்டிருந்த நிலையில் சம்பவதினம் மாலை 5 மணிக்கு தாயார் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன் போது தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அந்த கயிற்றில் கழுத்தை உள்நுழைத்து விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.