ஆகஸ்ட் 03ம் திகதி ஆடிப்பெருக்கு; ஏன் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகின்றது?
2024 ஆம் ஆண்டின் ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 03ம் திகதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மாலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது.
இது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினம் ஆகும். சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளது. அதனால் இந்த நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆடிப் பெருக்கு வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும்.
இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது. அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.
ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
அதேசமயம் ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடலாம்.
ஆடிப்பெருக்கு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை.
அதுமட்டுமல்லாது ஆடிப்பெருக்கன்று திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.