காலியில் விவசாய நிலத்தில் கொல்லப்பட்ட இளைஞன்! வெளியான திடுக்கிடும் தகவல்
காலி மாவட்டம் - எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் விவசாய நிலம் ஒன்றில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் சடலம் நேற்றைய தினம் (07-04-2023) பிற்பகல் எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய சந்த குமார சரத்குமார என தெரியவந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.