சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு
பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் , கடந்த 13ஆம் திகதி எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாமடைந்த இளம்யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய, இலக்கம் 68 இல் வசிக்கும் பி.ஜி. ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்த பின்னர் குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சமையலறையில் எரிவாயு அடுப்பை பற்ற வைக்கச் சென்ற போது அது எரியாததால் தீக்குச்சியால் பற்ற வைக்க முற்பட்ட போது எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று தகனம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிச் சடங்கு செய்யவென குடும்பத்தாரிடம் குறித்த பெண்ணின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் கொள்வனவு செய்த சிலிண்டர் இவ்வாறு வெடித்தமையால் தனது மகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக பெண்ணின் தந்தை கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசேட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.