வெளிநாட்டில் இருந்து வந்த கணவரால் இளம் மனைவிக்கு ஏற்பட்ட துயரம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவனின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பொலிஸாருக்குக்கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 31 வயதுடைய பலநோக்கு கூட்டுறவு வீதி, மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்றையதினம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியிருந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த போது அவரால் அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் கேட்ட போதே இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.