இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் யோஷித ராஜபக்ஷ கைது
இரண்டாம் இணைப்பு
இன்று (17) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்க்ஷ,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (17) காலை லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
இலங்கை கடற்படையில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டது மற்றும் அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரச கடற்படைக் கல்லூரியில் அவருக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆகியவை தொடர்பான விசாரணையின் நிமித்தமே ராஜபக்ஷ ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.
விசாரணை அதிகாரிகளால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கேள்விகளுக்குப் பின்னர், ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணை ஒன்று இருந்ததால் தம்மால் ஆஜராக முடியவில்லை என்று அவர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இதன் விளைவாக, அவர் ஆஜராக வேண்டிய நேரம் இன்று காலைக்கு மாற்றியமைக்கப்பட்டது. இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.