பொரித்த கோழியில் புழுக்கள்; கடையை மூடிவிட்டு ஓட்டமெடுத்த உரிமையாளர்!
சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 பெப்ரவரி 02ஆம் திகதி, சம்மாந்துறை கல்லரிச்சல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.

கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர்
இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கு மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என வாதாட முயன்ற போதிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கிய வலுவான சாட்சியங்கள் மற்றும் சட்ட வாதங்களின் அடிப்படையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் விதித்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.