வடதாரகை திருத்தப் பணிகளை துரிதப்படுத்த பணிப்புரை!
வடதாரகை படகின் திருத்த பணியினை விரைவுபடுத்துமாறு யாழ் மாவட்ட செயலர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கச்சதீவு அந்தோனியால ஆலய பெருவிழா முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே மாவட்ட செயலர் இதனை கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு அந்தோனியார் உற்சவம்
குறிகட்டுவான் - நெடுந்தீவு சேவையில் ஈடுபடும் வடதாரகை படகானது அண்மைய நாட்களில் திருத்தப்பணிக்காக காங்கேசன்துறை கடற்படைமுகாமில் நிறுத்தப்பட்டுள்ளது.
வழமையாக கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களின் கடற் பயணத்திற்கு வடதாரகை படகு பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.
எதிர்வரும் மாதம் கச்சதீவு அந்தோனியார் உற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் பக்தர்களை கச்சதீவுக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடுவதற்கு வடதாரகை படகு மிகவும் முக்கியமானது.
அதேசமயம் குமுதினி படகினை பயன்படுத்தினால் நெடுந்தீவிற்கான போக்குவரத்து பாதிக்கும் இம்முறை உற்சவத்தின் போது வடதாரகை சேவைக்கு அமர்த்தபடாத விடத்து கச்சதீவு செல்லும் பக்தர்களின் கடற்பயணத்தில் பெரும் இடர்பாடான நிலை காணப்படும் எனவும் மாவட்ட செயலர் சுட்டிக்காட்டினார்.
எனவே , வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதனைப் புரிந்து கொண்டு கச்சதீவு ஆலய உற்சவத்திற்கு முன்னர் வடதாரகை படகின் திருத்த பணியினை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.