நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையின் பெண் வார்டில் இருந்த பெண் கைதிகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், சற்று நேரத்திற்கு முன்னரிலிருந்து ஆண் கைதிகள் குழுவொன்றும் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு கைதிகள் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 35 பேர் இதுவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் இரு கைதிகள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், காயமடைந்த கைதிகளில் மேலும் 10 பேருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.