இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்
நாட்டில் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) தெரிவித்தார்.
இன்றைய தினம் (17-11-2022) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் காவல்துறையில் முறைப்பாட்டை அளிக்க சரியான சூழல் இல்லை. ஒரு பெண் ஒரு காவல்துறை நிலையத்தில் துன்புறுத்துதல் பற்றி முறையிட வரும்போது காவல்துறையில் உள்ள அனைவரும் கூடி விடுகிறார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரகசியத்தன்மையை உறுதி செய்ய குறைந்தது 13 பெண் காவலர்கள் தேவையென கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்வதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.