துப்பாக்கியுடன் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
T56 ரக துப்பாக்கி
பெண்ணொருவர் ஹெவ்லொக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டிற்குT56 ரக துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் கண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வெள்ளவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டை சோதனை செய்து, துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் 67 வயதுடைய பெண் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அவரது காரின் பின்புற கதவு திறந்திருந்தபோது, ஒரு பையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி இருப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி, இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த துப்பாக்கி உண்மையானதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.