சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்த பெண்!
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்த இரு குழந்தைகளின் தாயை வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உடுகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹிதும ஹல்விட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.

பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று தனது கைப்பேசியைக் காகிதத்தினால் மறைத்துக்கொண்டு இரகசியமாகச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக சிறைச்சாலை பேருந்தைக் கைப்பேசியில் காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடுகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த கன்னங்கரவின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.