இலங்கை வர முயற்சித்த கிளிநொச்சி பெண் இந்தியாவில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூரை சேர்ந்த 36 வயதான குறித்த பெண் இலங்கை வருவதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றுள்ளார் .
இதன்போது அவரது ஆவணங்களை குடியகல்வு அதிகாரிகள் சோதனை செய்த போது அவை போலி என தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள்
அவர் கடந்த 1998-ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு சென்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
அங்கு 2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி கடவுச்சீட்டை பெற்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குடியகல்வு பிரிவு அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டின் பேரில் விமான நிலைய பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அவரது இலங்கையில் உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.