போதைப்பொருள் கடத்தலால் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான பெண் ; பொலிஸாரின் அதிரடி
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்ட வருமானத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
அதற்கமைய கொழும்பு -14 மற்றும் ஜா-எல பகுதிகளில் அமைந்துள்ள 514 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி, 4 கடை அறைகள், மூன்று மாடி வீடு மற்றும் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 6 வங்கி கணக்குகள் ஆகியவற்றை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கான உத்தரவுகளை நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் நீடித்து அமுல்படுத்தியுள்ளன.
விசாரணைகளின் போது, வெல்லம்பிட்டி பகுதியில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வீடும் கண்டறியப்பட்ட நிலையில் அதனை மார்ச் 20 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.