இந்தியாவில் உயிரிழந்த பெண்ணின் 40 கோடி கொள்ளை! இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!
மும்பையில் போலி ஆவணங்களைத் தயாரித்து உயிரிழந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 40 கோடி ரூபாவை கையாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட 180 நாள் காவல் உத்தரவு தடையை ஆட்சேபித்தே இந்த பிணை மனுதாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டின்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில் இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மீளப்பெற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிலைகொண்டிருந்த முக்கிய அமைப்பொன்றின் முக்கிய செயற்பாட்டாளரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கைத் தமிழரானபெண்ணொருவர் இந்தியாவுக்கு சென்று தனது பெயரில் ஆதார், பான் மற்றும் இந்திய கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளார்.
நான்கு பேர் போலியான உரிமை மாற்று படிவத்தை (பவர் ஒப் எட்டோர்னி) தயாரித்து குறித்த பெண்ணுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.
இருப்பினும், 2021 அக்டோபர் 1-ம் திகதியன்று சென்னை விமான நிலையத்தில் அவர் பிடிபட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்பட்ட 90 நாள் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
90 நாள் காவலின் முடிவில், விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், காவல் நீடிப்புக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்தநிலையில் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளின் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே இன்று அவர்கள் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.