மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு? அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்
எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும்.

மின்சார நுகர்வு
அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும்.
நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை குறித்து நாம் ஆராய்வோம். எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும்.
உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளன. மறுபுறம், இவ்வாறானதொரு சூழலில் நாம் கோரும் டெண்டர்களில் சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை.
எனவே, எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.