மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு - செங்கலடி – கறுத்தப்பாலம் பகுதியில் இன்று (05) அதிகாலை காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நெல், உரம் மூடைகள், பொருட்கள், பயிர்கள், கட்டிடங்கள் என்பவற்றை சேதமாக்கியுள்ளன.
யானைகளின் அட்டகாசத்தால் செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் உட்பட பசளை மூடைகளும் வர்த்தக நிலைய கட்டிடமும் அதனுள் காணப்பட்ட பொருட்களும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளன.
மேலும் வர்த்தக நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள விவசாய காணியில் காணப்படும் தென்னை மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர் வகைகளையும் காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன.
விவசாய காணியை சுற்றி அமையப்பெற்றிருந்த மதிலும் யானைகளின் தாக்குதலால் உடைந்து நொறுங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித மோதல், யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற வேளை உரிய அதிகாரிகள் விரைவாக கவனம் செலுத்தி இதற்கான நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.