மட்டக்களப்பு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
வவுணதீவு, தாண்டியடி, கன்னங்குடா ஆகிய பகுதிகளுக்குள் நேற்று (22) இரவு காட்டுயானைகள் உட் புகுந்ததனால் அப்பகுதியில் மிகுந்த பதற்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளை அப்பகுதிகளை விட்டு விரட்டும் நடவடிக்கையில் வன ஜீவ ராசி திணைக்களத்தினர் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல்
தொடர்ச்சியாக தமது பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகள் பயன் தரும் மரங்களை துவம்சம் செய்து நாசப்படுத்துவதுடன், ஆலய மதில்கள் வேலிகளை உடைத்து சேதங்களையும் விளைவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாந்தீவு பிரதேசத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டமொன்று பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது .
வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக காட்டு யானைகளிடமிருந்து விவசாய செய்கைகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
