தூக்கத்தில் கொதி எண்ணெய்யை ஊற்றிய மனைவி; கதறி துடித்த கணவன்
உறங்கி கொண்டிருந்த கணவன் மீது, மனைவி கொதி எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது.
வலி பொறுக்க முடியாமல் கதறினேன்
2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.
வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, கதவைத் தட்டி சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள்.
அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன்.
'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.