இலங்கையை உலுக்கிய சம்பவம்; கணவனை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மனைவி!
அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று (17) மீட்கப்பட்ட நிலையில் அதுதொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குழிதோண்டி புதைக்கப்பட்ட மனித கால்
வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸாருக்கு கடந்த 08 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், காணாமல்போன நபரின் வீட்டின் பின்புறத்தில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போனவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
மனைவியின் தகாத உறவு
மனைவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , கடந்த மே மாதம் 11 ஆம் திகதி தனக்கும் தனது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் தகராறின் போது தனது கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்தாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் பின்புறத்தில் நேற்று (17) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த கணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.