மறைந்த சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: சிஐடிக்கு சென்ற மனைவி!
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, சட்டத்தரணி சாமரி பிரியங்கா, இராஜாங்க அமைச்சரின் மரணம் தொடர்பான சில காரணங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கூறியதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனவரி 25 அன்று, சனத் நிஷாந்தவின் வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், அதிகாலை 02:00 மணியளவில் ஓடும் கண்டெய்னர் ட்ரக் வண்டியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சாலையோரத் தடையில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் உட்பட காயமடைந்த மூவர் ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சாரதி பின்னர் ஜனவரி 26 அன்று கைது செய்யப்பட்டார்,
பின்னர் பெப்ரவரி 05 அன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 500,000 ரூபா பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.