கொழும்பு மாநகர சபை யார் வசம் ; ஒரு வாரத்தில் தீர்வு
கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பது இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்க்கட்சியினர் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள் என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆணை தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.
சகல எதிர்க்கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் இணைத்துக் கொண்டு கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கிறது. கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பதை நாட்டு மக்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
பெரும்பான்மை பலத்துடன் நாங்களே ஆட்சியமைப்போம். சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
இவ்வாறான கருத்துக்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்கட்சிகள் வெகுவிரைவில் தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.