அவர்கள் சவப்பெட்டியில் தான் திரும்புவார்கள் ; ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பெரும் படைக்கு பறந்த எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் 'ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், மத்திய கிழக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகின் எண்ணெய் தேவைக்கான கழுத்து நரம்பராக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அணுக்களை துண்டித்து ஈரான் உலக நாடுகளை எண்ணெய் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

அமெரிக்க படைத்தளங்கள்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நேற்று சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் படைத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதற்கு முன்னர் ஈரானின் பல்வேறு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
படைகள் குவிப்பு இந்த சூழலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 3,500 வீரர்களை அனுப்பியுள்ளது. குறிப்பாக ஈரான் எல்லையோரங்களில் அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே USS Tripoli என்ற போர்க்கப்பல் 2,500 கடற்படை வீரர்களுடன் அப்பகுதிக்கு வந்துள்ளது. ஜப்பான் கடற்கரையிலிருந்து கொண்டுவரப்பட்ட USS Tripoli கப்பலில் F-35 போர் விமானங்கள் மற்றும் Ospreys ஹெலிகாப்டர்களை இயக்கும் வசதி உள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க வீரர்கள் குவிப்புக்கு ஈரான் பதிலளித்துள்ளது. ஈரானின் முன்னணி நாளிதழான 'தெஹ்ரான் டைம்ஸ்', தனது முதல் பக்கத்தில் "நரகத்திற்கு நல்வரவு" (Welcome to Hell) என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய மண்ணில் கால் வைக்கும் எந்தவொரு அமெரிக்க வீரரும் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்று அது எச்சரித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நுழைந்தால், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர். முக்கியமாக ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு அருகே தனது படைகளை ஈரான் குவித்து வருகிறது.