விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை
கல்முனையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன், இன்று தெரிவித்தார்.
அங்குள்ள உணவகங்களில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய நகர் பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாதவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள், உணவு பரிமாறுவோர் ஆகியோருக்கு சுகாதாரம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகாரசட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றின் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும் இதனை மீறுபவரகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்புச் சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, பாவனைக்குதவாத உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிக்கப்பட்டால், அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்நிலையங்கள் மூடப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.