வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களிற்கு எச்சரிக்கை
வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றுமாலை விடுத்துள்ள அறிக்கையில் ,
இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுமுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது.
இது தற்போது இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளதனால் நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியமுள்ளது.
அதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.