மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண் தொடர்பில் கடும் எச்சரிக்கை!
இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களுடன் சில வாகனங்கள் இயக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள்
புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்குத் தரமான பதிவு எண்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களால், சில குழுக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் சில உரிமையாளர்கள் வெவ்வேறு வண்ணங்களில் பதிவு எண்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையருக்கு பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், விதிமீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.