இலங்கையில் அரச அதிகாரிகளிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ஏராளமானோர் சமர்ப்பிக்க உள்ளதாகவும், நாளைய தினத்திற்கு பிறகு அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை கடிதங்கள்
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், அபராதம் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து நாளை முதல் தாமதமான நாட்களுக்கான அபராதம் அறவிடப்படும்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிவிப்புகளை மின்னணு சமர்ப்பிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் தங்கள் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி காலகட்டத்தில் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கான சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இன்னும் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
அதன்படி, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அந்த அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படும் என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.