திருகோணமலையின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
மகாவலி ஆற்றை அண்மித்துள்ள நீரேந்து பகுதிகளில் 17ஆம் திகதி இரவு முதல் பெய்யும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படலாம்
மேலும் மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி) சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லு பாதை, சோமாவதிய ரஜ மகா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே, சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள் அடுத்த சில நாட்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மகாவலி ஆற்றுக்கு கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.