கிளிநொச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விடுத்த அறைகூவல்!
சஜித் பிரேமதாச அல்லது அநுர குமார திசாநாயக்கவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து நாட்டு மக்கள் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (10-09-2024) பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய பொருளாதார வீழ்ச்சியை அடுத்து மக்கள் படும் துன்பத்தைப் போக்க சஜித்தோ அல்லது அனுரவோ முன்வரவில்லை.
உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்களை சந்தித்து உரம், எரிபொருள் கேட்ட போது சஜித்துக்கும் அநுரவுக்கும் தேர்தல் நடத்துமாறு கோரியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி,
மக்களின் கஷ்டங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்துமாறு கோரியும் வேலைநிறுத்தம் நடத்தியும் நாட்டை சீர்குலைக்க முயன்ற தலைவர்களை நம்ப முடியாது எனவும் தெரிவித்தார்.
எனவே, சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.