உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா!
ரஷ்ய - உக்ரேன் மோதலால் தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு சிறப்பு வீசாவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் நிலவுகின்ற சமீபத்திய நிலைமையின் அபிவிருத்தியின் பின்னணியில், பெலாரஸுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பெலாரஸின் நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.
அதற்கமைய சுமார் 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற பெலாரஸில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகத்தால் நடாத்தப்பட்ட சந்திப்புகளில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதை எளிதாக்கும் பணியில் தூதரகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக தூதரகம் பெலாரஸில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, அத்தகைய மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு சிறப்பு வீசாவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தற்காலிகமாக இலங்கைக்கு நாடு திரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களும் மொஸ்கோவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்காக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு 24 மணித்தியாலங்களும் இயங்கும் +79801445726 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் , slemb.moscow@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.