வெனிசுலா அதிபர் மற்றும் மனைவி கைது; டிரம்ப் அறிவிப்பால் உலகநாடுகள் திகைப்பு!
சற்றுமுன் வெனிசூல அதிபர் மற்றும் மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

வெனிசுலா அதிபர் கைதை உறுதிப்படுத்திய டிரம்ப்
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல், சமூக ஊடகத் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டார்.
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு திடீர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ( Cilia Flores) ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்தார்.

"அமெரிக்க இராணுவம் வெனிசுலாவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்தது, மேலும் ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் கைது செய்யப்பட்டு வெனிசுலாவுக்கு வெளியே மாற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார் .
அதேவேளை டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா கடல் பகுதிக்குத் தடை விதிப்பது மற்றும் துல்லியத் தாக்குதல்கள் மூலம் மதுரோ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வந்தது, ஆனால் மதுரோ பதவி விலகாததால், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அவசர நிலை பிரகடனம்
அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை 1.50 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெனிசுலா இராணுவ முகாம்கள் சிலவே இத்தாக்குதல்களின் இலக்காக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக நகரின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தற்போது தடைப்பட்டுள்ளது. வெடிப்புகளைத் தொடர்ந்து நகருக்கு மேலே விமானங்கள் பறப்பதை அவதானிக்க முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வெனிசுலா ஜனாதிபதியால் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.