வெளிநாடொன்றில் சிக்கிவுள்ள வவுனியாப் பெண் தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் இலங்கைப் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வழிகாட்டல் தொகுப்பை தயாரிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக துன்புறுத்தப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த செல்லையா காளி அம்மா என்ற பெண்ணின் சார்பில் சட்டத்தரணி மஞ்சுளா பாலசூரியவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, அதன் பணிப்பாளர்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் செயலாளர், ஓமான் தூதுவர் அமீர் அஜ்வாட் உள்ளிட்ட 11 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் செல்லையா காளி அம்மா கடந்த ஏப்ரல் 2022 இல் வீட்டு வேலைக்காக ஓமன் சென்றார்.
ஓமன் செல்வதற்கு முன்னர் லெபனானில் 6 ஆண்டுகளும் குவைத்தில் 3 ஆண்டுகளும் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமனில் உள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற அவர், அந்த வீட்டில் துன்புறுத்தப்பட்டதாகவும், வேலை திருப்திகரமாக இல்லை எனக் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்ப அந்த வீட்டின் முதலாளிகள் முடிவு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட பெண் ஓமானில் அமைந்துள்ள பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு பாதிக்கப்பட்ட சுமார் 30 பெண்கள் இருந்தனர். அங்குள்ள பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியிருந்தனர், அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அங்கு தங்கியிருந்த செல்லையா காளி அம்மா என்ற பெண் உள்ளிட்ட பெண்கள் போராட்டம் நடத்தியதையடுத்து கடந்த மே மாதம் 25ம் திகதி உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் செல்லையா காளி அம்மாவை நாட்டிற்கு அழைத்து வருமாறு வவுனியாவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேவை பணியக அலுவலகத்திடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதற்காக அதிகாரிகள் முதலில் 10 இலட்சம் ரூபாவும் பின்னர் 6 இலட்சம் ரூபாவும் கேட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பெண் சட்ட உதவி பெற முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
ஓமானில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் சட்ட உதவியைப் பெறுவதற்குத் தேவையான நிதியுதவியை ஏற்பாடு செய்யுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் மனு செய்துள்ளனர்.
இதேவேளை, மத்திய கிழக்கில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரரின் சட்டத்தரணி, அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான தீர்ப்பை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.