சிறைக்கு கொண்டு செல்கையில் தப்பிஓடிய கைதி தமிழகத்தில் தஞ்சம்!
வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிய இரு கைதிகளில் ஒருவர் இன்றைய தினம் (21) காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
தப்பியோடிய சந்தேக நபர் மன்னார் போலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதிகாரிகள் தீவிர விசாரணை
சம்பவத்தில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன் என்பவரே இவ்வாறு கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் இன்று அதிகாலை தஞ்சமடைந் துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிந்துஜன் தந்தை செல்வராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதால் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் மண்டபம் அகதி முகாமில் உள்ளமை தெரிய வருகிறது. குறித்த நபர் வவுனியா சிறைச்சாலையில் குற்றம் ஒன்றிற்றாக தடுத்து வைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மன்னாரை சேர்ந்த இருவர் கை விலங்குடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தப்பியோடிய சந்தேக நபர் தலைமன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தப்பியோடிய மற்றைய கைதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.