ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்
ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, அழுத்தத்தை கொடுத்து வருவதாக, ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.

208 மாலுமிகளை துகாப்பாக மீட்ட இலங்கை கடற்படை
இதனையடுத்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் சிக்கியிருந்த ஈரானிய கடற்படை துணைக்கப்பலான 'Booshehr'-ல் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
இந்த நிலையில்,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசாங்கத்திடம் இந்த மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர்களை ஈரானுக்கு அனுப்பினால், அவர்கள் ஈரானின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியத் தூதருடனான கலந்துரையாடலின் போது, கொழும்பில் தங்க வைக்கப்படுள்ள மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும், அவர்களை மாற்று திட்டம் ஒன்றுக்கு ஊக்குவிப்பது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் உள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிப்பதாக, ரொயட்டர்ஸ் கூறியுள்ளது.
எனினும் இந்த தகவல் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.