ஜனாதிபதி ரணிலுக்கு பறந்த அவசர கடிதம்... எது தொடர்பில் தெரியுமா?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wikcremesinghe) அடக்குமுறைகளை கையாள்வதனை தவிர்க்குமாறு தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணி (National Front) தெரிவித்துள்ளது.
தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் பொறியியலாளர் கபில பெரேராவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது நிச்சயமாக நல்ல மற்றும் அவசியமான விடயமாக இருக்கின்ற போதும், இவ் விடயம் முறையானது அல்ல எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வெகுஜனப் போராட்டத்தின் ஆரம்பம் மற்றும் காரணத்தை கண்டறிந்து அதற்குப் பரிகாரம் செய்வதே சிறந்த வழி என்பதனை பௌத்த தத்துவத்தின் அடிப்படைகளை நன்கு அறிந்த உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச உறவுகளை நன்கு நிர்வகிப்பதும், அடிப்படைத் தேவைகள், குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதுமே போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழியாகுமெனவும் தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இழந்த பொதுச் சொத்துகளை மீட்டெடுப்பதும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை வழங்கக்கூடிய திட்டமிட்ட செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் அரசாங்கம் முன்னெடுத்த அடக்குமுறை நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச அவமானம் தொடர்பில் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தொழிவல்லுனர்களின் தேசிய முன்னணி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.