சீரற்ற வானிலையால் குருநாகலில் 100 வீடுகள் சேதம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதிகமான மழை
அவுலேகம, தமிழ்வெல்லம, ஏதம, கரந்தவெட்டிய போன்ற பகுதிகள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.