பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் செயற்படும் பாதாள குழுக்கள் ; பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் இன்று (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவு
முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இந்தக் குற்றங்களை அடக்குவதற்கு தாம் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சில பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சில அரசியல் ஆசீர்வாதங்களையும் சில பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை என்றும், அரசியல் சூழல் மிகவும் நன்றாக உள்ளது என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் வராது என்றும் கூறினார்.